Search This Blog
Feb 24, 2011
Feb 23, 2011
Feb 21, 2011
மொபைல் போன்களால் உயிருக்கு ஆபத்து!
ஆண்மையைப் பறிக்கும் செல்போன்கள்! – மத்திய அரசு நிபுணர் குழு பகீர் ரிப்போர்ட்
Thursday, February 3, 2011 at 1:34 pm | 787 views
மொபைல் போன்களால் உயிருக்கு ஆபத்து! – மத்திய அரசு நிபுணர் குழு அறிவிப்பு
கொடிய நோய்கள்…
செல்போன்கள் மற்றும் செல்போன் டவர்களால் மிக பயங்கரமான நோய்கள் தாக்குவதாக மருத்துவ நிபுணர்கள் பல முறை எச்சரித்துள்ளனர். நினைவிழப்பு, கேன்சர், மூளைக்கட்டி, கவனமின்மை, பார்வைக் கோளாறு, தூக்கமின்மை உள்ளிட்ட ஏராளமான வியாதிகள் தாக்குவதாக எச்சரித்து வந்தனர்.
மேலும் செல்போன் டவர்கள் அமைந்துள்ள இடங்களைச் சுற்றி வாழும் மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், பூச்சியினங்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் எச்சரித்தனர். அன்றாட வாழ்க்கையில் நாம் பார்த்து வந்த சிட்டுக் குருவிகள், பட்டாம் பூச்சிகள், தும்பிகள் போன்றவை, செல்போன் டவர்கள் உள்ள ஏரியாவில் அடியோடு ஒழிந்து விட்டதாக ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். காரணம், செல்போனிலிருந்து வெளியாகும் கொடிய கதிர்வீச்சு.
ஆனால் இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் கொடுமை. மொபைல் போன்களால் வரும் ஆபத்து குறித்து எவ்வளவோ எச்சரித்தாலும், மொபைல் போன்களின் விற்பனை மட்டும் நாளுக்கு நாள் இரண்டு மூன்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் இன்றைய தேதிக்கு 76 கோடி பேர் மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர். பலர் இரண்டு அல்லது மூன்று செல்போன்கள் கூட வைத்துள்ளனர்.
அதே நேரம், மிக சிக்கலான நரம்புக் கோளாறு நோய்கள் பாதிப்பால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
மத்திய நிபுணர் குழு
இந்தப் போக்கு குறித்து கவலையடைந்த மத்திய அரசு, தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் மற்றும் சுகாதார ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த 8 அதிகாரிகளைக் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்து, செல்போன்களால் உண்டாகும் நோய் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தரக் கேட்டுக் கொண்டது. தொலைத் தொடர்புத் துறை தொழில்நுட்ப ஆலோசகர் ராம்குமார் இந்தக் குழுவுக்குத் தலைமை வகிக்கிறார். இந்திய விஞ்ஞானக் கழகத்தின் விஞ்ஞானி டாக்டர் எஸ்கே சர்மா உள்ளிட்டோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, “குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரேடியோ கதிர்களை உமிழும் மட்டமான செல்போன்களை அனுமதிக்கக் கூடாது. அதற்கு அனைத்து வகை செல்போன் கருவிகளும் தொலைத் தொடர்புத் துறையின் தரக்கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
மொபைல் கருவிகளின் தரம் குறித்து தெளிவான வரையறையை தேசிய அளவில் உருவாக்க வேண்டும்.
செல்போன் டவர்களின் மின்காந்த அலைவரிசை (electromagnetic frequency -EMF) கதிர்வீச்சின் அளவு எந்த அளவு இருக்க வேண்டும் என்பது குறித்து வரையறை நிர்ணயிக்க வேண்டும்…” என பரிந்துரைத்துள்ளது.
மேலும் செல்போன் கருவிகளால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் குறித்தும் இந்தக் கமிட்டி பலமாக எச்சரித்துள்ளது.
இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
செல்போன்கள் உபயோகிக்கும் போது, அதில் ஏற்படும் வெப்பத்தில் ஒரு டிகிரியின் சிறுபகுதி தலையைத் தாக்கினாலும், ரத்த ஓட்டத்தையே பாதிக்கும் அளவு ஆபத்து ஏற்படுகிறது. ரத்தத்தில் பரவும் இந்த வெப்பம் உடல் முழுவதும் பயணப்படுகிறது. ரத்தத்தில் உள்ள செல்களைச் சிதைக்கும் அளவுக்கு இது மோசமானது.
மேலும் செல்போன்களின் மின்காந்த அலைகள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் உயிரைப் பறிக்கும் அளவு ஆபத்தானவை.
அதிக கதிர்வீச்சு கொண்ட மொபைல்கள் காரணமாக, தலைப்பகுதியின் தோல் பொசுங்கிவிடுகிறது. இதனால் தொடு உணர்வையே அது இழந்துபோய், தலையின் ஒரு பகுதி மட்டும் மரத்துப் போகும் அபாயம் ஏற்படுகிறது. இத்தகைய நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீப மாதங்களில் அதிகரித்திருப்பது கவனிக்கத்தக்கது.
நினைவிழப்பு, கேன்சர், மூளைக்கட்டி, கவனமின்மை, பார்வைக் கோளாறு, தூக்கமின்மை, காதுகளில் எப்போதும் சத்தம் கேட்பது போன்ற உணர்வு, ஜீரணக் கோளாறு, இதயத் துடிப்பு சீரற்றுப் போதல் என கொடிய நோய்களுக்கு செல்போன் கதிர்வீச்சு பாதிப்பு காரணமாகிறது.
இவற்றை ஒரேயடியாக இனி தடுக்க முடியுமா என்பது தெரியவில்லை. அதே நேரம் கட்டுப்படுத்தும் ஒருவழியாக ‘இந்திய டெலிகிராப் சட்டம் 1885′-ஐ திருத்தலாம். அதன்படி, மொபைல் போன்களைத் தரப்படுத்தலாம். தரமற்ற மொபைல் போன்கள் இந்திய சந்தைக்குள் வருவதையும் அடியோடு தடுக்கலாம்.
மக்களுக்கு எச்சரிக்கை…
இந்த ஆபத்துக்களிலிருந்து ஓரளவு தப்பிக்க சில வழிகள் உள்ளன.
குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் கருவுற்ற பெண்கள் செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்… அல்லது முடிந்தவரை குறைக்கலாம்.
மற்றவர்கள் செல்போனை காதில் வைத்துப் பேசுவதைக் குறைத்துவிட்டு ஸ்பீக்கர்களை ஆன் செய்து பேசலாம்.
உடலில் ஏற்கெனவே மருத்துவ காரணங்களுக்காக கருவிகளைப் பொருத்தியிருப்போர் அடியோடு செல்போன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
-இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக அறிக்கை
மொபைல் போன்களின் கதிரியக்கம் குறித்து இரண்டாவது ஆய்வொன்றை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மூலம் மத்திய அரசு மேற்கொண்டது.
இந்த ஆய்வின் அறிக்கையும் இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் வலியுறுத்தப்பட்டுள்ள முக்கிய விஷயம், செல்போன் கருவிகளின் கதிரியக்கத்தால் ஆண்மை பறிபோகும் என்பதுதான்.
இதுதவிர, உடலின் நோய் எதிர்ப்பு செல்களையும் மெல்ல மெல்ல இந்த கதிரியக்கம் கொல்ல ஆரம்பித்து விடுவதாக அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.
இதுவரை தனியார் அமைப்புகள் மட்டுமே செல்போன் ஆபத்துக்கள் பற்றி எச்சரித்து வந்தன. ஆனால் இப்போதுதான் முதல் முறையாக, அரசு சார்ந்த நிபுணர் குழுக்கள் இதுகுறித்த ஆதாரப்பூர்வமான, அதிகாரப்பூர்வமான அறிக்கையை தெளிவாக அளித்துள்ளன.
இந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றே தெரிகிறது. அரசு நடவடிக்கையைவிட தனிப்பட்டோர் ஒத்துழைப்புதான் இதில் முக்கியம் என்று இந்த ஆராய்ச்சிக் குழுக்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் காலமானார்!
பிரபாகரன் தாயார் மரணம்!
Sunday, February 20, 2011 at 10:04 am | 573 views
பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் காலமானார்!
உடல்நலக் குறைவு காரணமாக அவர் வல்வெட்டித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அவரை பெருவாரியான சிங்கள மக்கள் சென்று பார்த்து, வணங்கிச் சென்றனர்.
அவருடைய வாரிசுகள் வெளிநாடுகளில் இருப்பதால், இறுதிக் காரியங்கள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செவ்வாய்க்கிழமை வரை அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று எம்கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வன்னி இறுதிப் போரின்போது பிரபாகரனின் தாய் மற்றும் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை இருவருமே ராணுவ முகாமுக்கு அடைக்கலமாக வந்தனர். இருவரையும் தனி முகாமில் வைத்திருந்தது ராணுவம். கடந்த ஆண்டு வேலுப்பிள்ளை காலமானார்.
அதைத் தொடர்ந்து பார்வதி அம்மாள் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக மலேசியாவில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார் பார்வதி. பின்னர் மேல் சிகிச்சைக்காக தமிழகத்துக்கு வந்த அவரை, விமான நிலையத்தில் இறங்கவும் அனுமதிக்கவில்லை இந்திய அரசு. அப்படியே திருப்பியனுப்பப்பட்டார்.
மீண்டும் மலேசியாவுக்கே திரும்பிய அவர், ஒரு மாதத்துக்குப் பிறகு இலங்கை சென்றார். வல்வெட்டித் துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். முதலில் அனுமதி மறுத்த இந்திய / தமிழக அரசுகள், நீதிமன்ற உத்தரவின்பேரில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வருமாரு அழைத்த போதும், அதனை அவர் ஏற்கவில்லை. தன் இறுதி மூச்சு வரை சொந்த ஊரிலேயே இருந்துவிடுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல…’ – மலேசியா வாசுதேவன் நினைவலைகள்
Monday, February 21, 2011 at 10:17 pm | 152 views
‘என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல…’ – மலேசியா வாசுதேவன் நினைவலைகள்
அந்த ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு…’ பாடலை அவர் பாடியிருந்த விதமும், கவியரசரின் வரிகளும் இசைஞானியின் இசையும் அவரை ஒரே இரவில் சிகரத்துக்குக் கொண்டு போய்விட்டன. அதன் பிறகு அவரது இசைப் பயணம் நிற்கவேயில்லை… அவரது உடல் ஒத்துழைத்த வரை.
மலேசியா வாசுதேவன் குரலில் வந்த எந்தப் பாடலை குறிப்பிடுவது எதை விடுவது… அத்தனை பாடல்கள்… அனைத்தும் கேட்கக் கேட்கத் திகட்டாத பாடல்கள்.
அப்போதெல்லாம் ரஜினி படத்தில் மலேசியா வாசுதேவனுக்கு கட்டாயம் சில பாடல்கள் இருக்கும். ஒவ்வொரு படம் பார்க்கும்போதும் அந்தப் படத்தின் பாட்டுப் புத்தகத்தை மறக்காமல் வாங்கிவருவோம். அதில் மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்கள் எத்தனை என்று முதலில் பார்க்கும் அளவுக்கு அவர் குரல் பிடித்துப் போனது அப்போது. அது என்னமோ… எஸ்பிபி குரலை விட இவரது குரல் ரஜினிக்கு அத்தனை பொருத்தமாக எனக்குத் தெரிந்தது!
காளியில் அடியாடு பூங்கொடியே, தர்மயுத்தத்தில் ஒரு தங்கரதத்தில் மற்றும் ஆகாய கங்கை, முரட்டுக்காளையில் பொதுவாக எம்மனசு தங்கம், எங்கேயோ கேட்ட குரலில் பட்டுவண்ண சேலைக்காரி, அடுத்தவாரிசில் ஆசை நூறுவகை, புதுக்கவிதையில் வாவா வசந்தமே, பாயும் புலியில் பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம், வேலைக்காரனில் பெத்து எடுத்தவதான், எஜமானில் எஜமான் காலடி மண்ணெடுத்து… இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
மாவீரன், அதிசயப் பிறவி படங்களில் ரஜினிக்கு எல்லா பாடல்களையும் இவர்தான் பாடியிருப்பார். அதிசயப் பிறவியில் வரும் ‘இதழெங்கும் முத்துக்கள் சிந்தட்டும்..’ பாடலின் இசையும் மலேசியா வாசுதேவன் குரலும் தனி கிறக்கத்தைத் தரும். ரஜினியே பாடுவது போலத்தான் இருக்கும் படத்தில் பார்த்தாலும், கண்ணை மூடிக் கொண்டு கேட்டாலும்!
ரஜினிக்கான தெம்மாங்கு, கலாட்டா பாடல்களைப் பாடுவதில் எஸ்பிபிக்கும் இவருக்கும் பெரும் போட்டியே இருக்கும். ரங்காவில் இடம்பெற்ற பட்டுக் கோட்டை நம்மாளு, மிஸ்டர் பாரத்தில் என்னம்மா கண்ணு, நல்லவனுக்கு நல்லவனில் நம்ம மொதலாளி… மறக்கக் கூடிய பாடல்களா அவை!
நெற்றிக்கண்ணில் வரும் தீராத விளையாட்டுப் பிள்ளை பாடலை அவர் பாடியிருக்கும் ஸ்டைல் ரொம்பவே ரசிக்க வைக்கும்.
டிஎம்எஸ்ஸுக்குப் பிறகு, சிவாஜிக்குப் பொருந்திய சரியான குரல் மலேசியா வாசுதேவனுடையதுதான்.
வெள்ளை ரோஜாவில் தேவனின் கோயிலே யாவரும் தீபங்களே… பாடலை வாசுதேவன் பாடியிருந்த விதம், அந்தப் பாடலுக்கே தனி மரியாதை தந்தது. அப்புறம்…முதல் மரியாதை… தமிழ் திரை இசைக்கே மகுடம் சூட்டிய அந்தப் படத்தில் இசைஞானியின் இசையில் மலேசியா வாசுதேவன் தன் பிறவிப் பயனை அடைந்தார் என்றால் மிகையல்ல. அந்த பூங்காற்று திரும்புமா… வுக்கு நிகரான இன்னொரு பாடல்… ம்ஹூம் சான்ஸே இல்லை!
மலேசியா வாசுதேவனின் குரலுக்கு உள்ள தனிச்சிறப்பு… யாராலும் அத்தனை சுலபத்தில் பாட முடியாத சிக்கலான மெட்டுக்களைக் கூட அழகாக பாடிவிடுவதுதான். அந்த versatility தமிழில் ரொம்ப அரிது. இந்தியில் கிஷோர் குமார் மாதிரி என்று சொல்லாம்!
அவரால் அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா (நண்டு) பாடலையும் பாட முடியும், மாமனுக்கு மைலாப்பூருதான் (வேலைக்காரன்) பாடலையும் தர முடியும்.
அமரர் சிதம்பரம் சிஎஸ் ஜெயராமனின் குரலை அப்படியே ஜெராக்ஸ் எடுத்த மாதிரி பாடுவதிலும் அவர் வல்லவர்.
மணிப்பூர் மாமியார் என்று ஒரு படம். ராஜா இசை. எழுபதுகளின் இறுதியில் இந்தப் படப் பாடல்கள் ஒலிக்காத திருவிழா, கல்யாணம் இருக்காது. அதில் ‘ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே…’, என்ற பாடலுக்கு அப்படியே சிஎஸ் ஜெயராமன் மாதிரி குரல் கொடுத்து அசத்தியிருப்பார்.
பாண்டியராஜனின் முதல் படம் கன்னிராசியில் சுகராகமே… என ஆரம்பிக்கும் பாடலில் முதல் சரணம் வரை சிஎஸ் ஜெயராமன் குரலில் பாடி பரவசப்படுத்தியிருப்பார் வாசுதேவன்.
அடுத்தாத்து ஆல்பட் என்று ஒரு படம். இதிலும் மலேசியா வாசுதேவன் சிஎஸ் ஜெயராமன் குரலை நகலெடுத்திருப்பார், சொந்தங்களே சுற்றங்களே சோகம் என்ன சொல்லுங்களே… என்ற பாடலில். கேட்டு முடிக்கும்போது, விழியோரங்கள் துளிர்க்காமல் இருந்தால்தான் ஆச்சர்யம்!
காதல் பாடல்களில் மலேசியா வாசுதேவனின் குரல் கிறங்கடிக்கும். தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளியில் சொக்கியவர்களுக்கு அது புரியும்.
அந்த ஏழு நாட்களில் வரும் ‘எண்ணியிருந்தது ஈடேற..’ ரொம்ப நாள் எனது விருப்பப் பாடல். விடியும் வரை காத்திரு படத்தில் நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு, இன்னொரு முதல் தரப் பாடல்.
கல்லுக்குள் ஈரம் படத்தில் கொத்தமல்லிப் பூவே என்ற பாடலில், ஆத்தோரம் சின்னக்குட்டி என்று ஆரம்பிக்கு அந்த வரிகளை அத்தனை அலட்சியம், கிராமத்துத் திமிர்த்தனம், கொப்பளிக்கும் காமம் என எல்லாம் கலந்து பாடியிருப்பார் மனிதர்.
ஆண்பாவத்தில் குயிலே குயிலே.., மனைவி சொல்லே மந்திரம் படத்தில் மானே மாங்குயிலே, அச்சமில்லை அச்சமில்லையில் ஓடுகிற தண்ணியிலே, நான் போட்ட சவாலில் சுகம் சுகமே…, கிராமத்து அத்தியாயத்தில் ஆத்து மேட்டுல, சிகப்பு ரோஜாக்களில் இந்த மின்மினிக்கு…., மண்வாசனையில் ஆனந்தத் தேன்சிந்தும் பூஞ்சோலையில், சின்னவீடு படத்தில் வெள்ளமனம் உள்ள மச்சான்…, நிறம் மாறாத பூக்களில் ஆயிரம் மலர்களே…, சகலகலா வல்லவனில் நிலாகாயுது… விட்டால் அவர் பாடிய பெரும்பாலான பாடல்களை இங்கே குறிப்பிட்டுக் கொண்டே போக வேண்டி வரும்!
காதல் சோகப் பாடலுக்கு பொன்மானைத் தேடி… ஒரு எவர்கிரீன் பாட்டு. தெம்மாங்குப் பாடல்களைப் பாடுவகில் இவர்தான் நம்பர் ஒன். எங்க ஊர் ராசாத்தியில் சிறுக்கி ஒருத்தி சிங்காரக் குறத்தி என்ற பாடலை அவர் அத்தனை வேகமாக, விறுவிறுப்பாகப் பாடியிருப்பார். ரஜினியின் பெரும்பாலான தெம்மாங்குப் பாடல்களை வாசுதேவன்தான் பாடியிருப்பார். படிக்காதவனில் வரும் சொல்லி அடிப்பேனடி, மாப்பிள்ளையில் என்னோட ராசி நல்ல ராசி, மாவீரனில் ஒதுங்கு ஒதுங்கு… எல்லாமே சூப்பர் ஹிட் பாடல்கள்!
ஆயிரம் புதிய பாடகர்கள் வந்தாலும், விதம் விதமாகப் பாடி அசத்தினாலும், வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்தே கேட்டு லயித்த இதுபோன்றதொரு பாடகர் இனி இல்லை எனும் போது மனம் கனத்துப் போகிறது.
நடிகராக வேண்டும் என்றுதான் மலேசியாவிலிருந்து வந்தாராம் வாசுதேவன். அந்த ஆசை அவர் ஐம்பதுகளைத் தொட்டபோதுதான் நிறைவேறியது. அந்த வாய்ப்பையும் தந்தது பாரதிராஜாதான். ஒரு கைதியின் டைரி படத்தில். அதன்பிறகு பல படங்களில் வெகு சிறப்பான வில்லத்தனத்தையும் குணச்சித்திர நடிப்பையும் வெளிப்படுத்தியிருந்தார் வாசுதேவன்.
இவர் இசையமைத்தது 4 படங்கள். அவற்றில் சாமந்திப்பூதான் பெஸ்ட். இப்போதும் ரசிக்க வைக்கிற இசை, பாடல்கள். ஆகாயம் பூமி என்றும் ஒன்றா… ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்!
ஒரு செய்தியாளராக ஒரே ஒரு முறை தினமணிக் கதிருக்காக அவரைச் சந்தித்திருக்கிறேன். மிக எளிமையான மனிதர். நிதானம் தவறாத பதில் அவர் தந்தவை.
பொதுவாக ஒரு மனிதன் இறந்துவிட்டால், அவரது நினைவுகளைச் சொல்லி அழுவார்கள். ஆனால் கலைஞர்கள் மறையும்போது மட்டும், அவர்களின் படைப்புகளை திரும்பத் திரும்ப கேட்டு மனம் பரவசப்படுகிறது. அந்த வகையில் மரணத்திலும் கூட சோகத்தைத் தராத மகத்துவம் கலைஞர்களுக்கு மட்டும்… மலேசியா வாசுதேவன் மரணம் என்ற செய்தி வந்ததிலிருந்து அவரது ஒரு நூறு பாடல்களை மீளக் கேட்டிருப்பேன்.
கலைஞர்கள் மரணத்தை வென்றவர்கள்!
மலேசியா வாசுதேவன் நினைவுகளுக்காக…
Subscribe to:
Comments (Atom)





